Wednesday, April 10, 2013

சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்


சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்
ஊட்டி, ஏப். 8:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நீலகிரி கோட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் (வணிகம்) சண்முக வேலாயுதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,
“விழா கால சிறப்பு பஸ்கள் இயக்கும் போது உள்ளூர் மக்கள் பாதிக்காத வகையில் இயக்க வேண்டும். பல பஸ்களில் மேற்கூரை உடைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும். பொன்னானி & கூடலூர் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். பஸ்களில் பெயர் பலகைகளை பொதுமக்களுக்கு அறியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.
ஊட்டி ஏ.டி.சி., பஸ் நிலையத்தில் பஸ்களின் கால அட்டவணை வைக்கப்பட வேண்டும். கைகாட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் காலை முதல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் & பந்தலூர் இடையே டவுன் பஸ் சேவை துவக்க வேண்டும். கூடலூர் கிளையில் காலியாக உள்ள பணிகளுக்கு ஒட்டுனர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே ஒட்டுனர் நடத்துனர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்” என்றார்.
போக்குவரத்து கழக பொது மேலாளர் (வணிகம்) சண்முக வேலாயுதம் பேசியதாவது:
நுகர்வோர் அமைப்புகளின் புகார்கள் ஆலோசனைகள் போக்குவரத்து கழக சேவையில் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறைகள் சரி செய்யப்படுகிறது. ஓட்டுனர், நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக பஸ்கள் இயக்கத்தில் குறைபாடு நிலவியது. ஆனால் பெரும்பாலான காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஏ.டி.சி.,யில் கால அட்ட வணை வைக்கப்படும். பஸ்களில் உள்ள மற்ற குறைபாடுகள் சரி செய்யப்படும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பயணிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொண்டால் போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாயும், நற்பெயரும் கிடைக்கும். பயணிகள் சில்லரை கொண்டு வருவது அவசியம் என்பதை உணர வேண்டும். சேவை அடிப்படையில் இயக்கப்படும் அரசு பஸ்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்
.இவ்வாறு சண்முகவேலாயுதம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலாளர் பாலராமகிருஷ்ணன், உதவி மேலாளர் கணேசன், கிளை மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment