Wednesday, April 10, 2013

பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க மாவட்டம் முழுவதும் சோதனை


பிளாஸ்டிக் பொருட்கள் தடுக்க
மாவட்டம் முழுவதும் சோதனை
ஊட்டி, ஏப். 10:
40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களையும் வணிகர்கள் பயன்படுத்தாமல் இருக்க அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் தமிழகத்தில் முதன்முறையாக கடந்த 1999ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. குறிப்பாக பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தட்டுக்கள், டம்ளர்கள் ஆகியன பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புக்கள் கேரி பேக்குகள் விற்பனையை முழுமையாக தடை செய்ய தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் சிலர் இந்த கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள், பயன்படுத்தும் வணிகர்களின் கடைகளில் சோதனை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் சிலர் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சிலர், 20 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த துவக்கினர். இதனால் தற்போது 40 மைக்ரானுக்கும் குறைவான அனைத்து பிளாஸ்டிக் கவர்களும் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தற்போது பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எந்தனை மைக்ரான் என கண்டறியும் மெஷின்களும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த வாரத்தில் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசிய கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், �நீலகிரி மாவட்டத்தில் முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சென்று முறையாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கடந்த 1999ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், 2000ம் ஆண்டு ஊட்டி நகராட்சி நிர்வாகம் 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த தடையுத்தரவு செயல்படுத்தப்பட்டது.
தற்போது சிலர் 20 மைக்ரானுக்கு அதிகமாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே இதையும் தடை செய்ய தற்போது 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுக்கள் மற்றும் கேரி பேக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு துணை ஆட்சியர் மற்றும் தாசில்தார் அளவில் உள்ள அதிகாரிகளை கொண்ட குழு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. மேலும தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றன. 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால் அவைகளை பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்� என்றார்.
கலெக்டர் தகவல்

No comments:

Post a Comment