Wednesday, January 30, 2013

ஊட்டி : நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய- மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், நியாய விலை கடைகளில் மின்னணு தராசுகளில் பேட்டரி சார்ஜ் நிற்பதில்லை எனக்கூறி பழைய எடைகற்களை கொண்ட தராசுகளை பயன்படுத்துகின்றனர். புதிய பேட்டரி மாற்றி மின்னணு தராசுகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பந்தலூரில் உர குடோன் அமைக்க வேண்டும்; பங்குகளில் மதியத்திற்கு மேல் மண்ணெண்ணெய் தருவதில்லை, பணியாளர்கள் சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும், என முறையிட்டார். இதற்கு பதிலளித்து துணை பதிவாளர் கேசவன் பேசுகையில்,மின் தட்டுப்பாடு காரணமாக மின்னணு எடை தராசுகள் பேட்டரி பழுதடைந்திருக்கலாம். புதிய மின்னணு தராசுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய எடை கற்கள், தராசுகள் தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது. தற்காலிக அவசர தேவைக்கு கற்கள், தராசு பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் 
தரமற்ற பொருட்கள், தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். 
காலாவதி பொருட்கள் கடையில் இருப்பு வைக்க கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பந்தலூரில் என்.சி.எம்.­எஸ்., உர குடோன் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றார். கூட்டத்தில், கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், தனி அலுவலர்கள், நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment