Monday, April 21, 2014

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி photos

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்





ஊட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி









வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி









ஊட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி










ஊட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி










ஊட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு  மையம் மக்கள் மையம், நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு,  நேரு யுவ கேந்திரா மற்றும் மக்கள் குரல் நீலகிரி கிளை ஆகியன் இணைந்து ஊட்டி கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின 

நிகழ்ச்சியில்  பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தலைமை வகித்து பேசும்போது
நாம் அனைவருக்கும் முக்கிய கடமை வாக்களிப்பது. எனவே  ஒவ்வருவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.  வாக்களிக்கும் முன் நல்லவரை தேர்வு செய்வதை உறுதி செய்து கொண்டு காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.  ஊரில் உள்ள மற்றவர்களிடமும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்து கூறி வாக்களிக்க செய்ய வேண்டும். அனைவரும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாளில் அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. வாக்கு சதவீதம் அதிகரித்தால் தான் மக்களாட்சி வலிமை பெறும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் பேசும்போது வக்களிப்பதாலே நம்முடைய உரிமையை சரியாக செய்கிறோம் என்பதற்கு முக்கிய சாட்சியாகும்.  வாக்களிக்கும் முன் நல்லவருக்கு வாக்களிக்க வேண்டும்.  தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்னதாக வாக்கு சாவடி அலுவலர்களிடம் பூத் சிலிப் எனப்படும் வக்குக்கான சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும்.  நீங்கள் வாக்களிக்காத பட்சத்தில் அதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி கள்ள ஓட்டாக பதிவு செய்ய வழிவகுக்கும் எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் யாரையும் பிடிக்காவிட்டால் பிரிவு 49 O ன் படி நோட்டா என்ற பட்டனில் வாக்கினை பதிவு செய்யலாம்.  ஓட்டுக்கு பணம் கொடுத்தல், மற்றும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடந்தால் மாவட்ட நிர்வாகதின் சார்பில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திற்கு 18004257025 என்ற இலவச எண்ணில்  புகார்களை பதிவு செய்யலாம் என்றார்.  

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் விளக்கம் அளித்தனர் தொடர்ந்து பயிற்சி மைய மகளிர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப பட்டது.

அதுபோல ஊட்டி A T C பேருந்து நிலையம் மார்க்கெட் ஆகிய பகுதிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகள் வாகன ஓட்டிகள் மாணவர்கள் வியாபாரிகள் என பல தரப்பினரிடையே  வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு  ஏற்படுத்த பட்டது. இதில் நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சோலூர் கணேஷன், கேத்தி நஞ்சன், ராஜுப்பெட்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு  மையம் மக்கள் மையம், நீலகிரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு  மற்றும் மக்கள் குரல் நீலகிரி கிளை ஆகியன இணைந்து
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டன.
குன்னூர் பகுதியில் நடத்திய நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணா சாமி தலைமை தாங்கினார்.  நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பதுகாப்பு மைய தலைவர்  சிவசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் டேவிட், கிப்சன், ஜெயபிரகாஷ், விஜயகுமார், செல்வி, இந்திராணி உள்ளிட்ட பலர் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகள் வாகன ஓட்டிகள் மாணவர்கள் வியாபாரிகள் என பல தரப்பினரிடையே  வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு  ஏற்படுத்த பட்டது. கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளக்கி  பொது மக்களிடம் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்   என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நுகர்வோர் மையம்,  மாவட்ட கூட்டமைப்பு மற்றும் கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பட்டு வருகிறது.


Monday, April 7, 2014

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

Dr-BR-Ambedkar
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.
பிறப்பு: ஏப்ரல் 14, 1891
இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா
பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்
இறப்பு: டிசம்பர் 6,  1956
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.
1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.
உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்
பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.
சமூகப்பணிகள்
1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”
இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்
வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.
விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.
பெளத்த சமயம் மீது பற்று
தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.
அம்பேத்கரின் பொன்மொழிகள்
  • “ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
  • “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
  • “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
  • “சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
  • “வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
இறப்பு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

அம்பேத்கரின் ஆரம்பக் கல்வி
5092008
சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல,
சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது!
-ஏங்கல்ஸ்
காலையில் மழை சோவென கொட்டத்துவங்கியது. சதாராவின் வீதியில் பள்ளிக்குப் புறப்படும் தறுவாயில்இருந்த சிறுவர்கள் ஐந்தாறு பேர் மழையையே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதையே சாக்காக வைத்துக்கொண்டு இன்று எப்படியும் பள்ளிக்கு மட்டம் போட்டுவிடுவது என்பது அவர்களுடைய திட்டம். அவர்களுள் ஒருவனாக நின்ற சிறுவன் பீமின் மனதிலோ வேறு எண்ணம். என்னதான் மழை விடாமல் பெய்தாலும், இன்று எப்படியும் பள்ளிக்குச் செல்வது என அவன் முடிவெடுத்திருந்தான். இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் பீமைக் கேலி செய்தனர். ”உன்னால்இந்த அடைமழையில் பள்ளிக்குச் செல்ல முடியுமா?” எனச்சவால் விட்ட.னர். அடுத்த நொடியே, எதையும் பொருட்படுத்தாமல் பீம் தெருவில் இறங்கி நடக்கத் துவங்கினான். எப்படியெல் லாம் தனது புத்தகப் பையை ஈரம் படாமல் பாதுகாக்க முடியுமோ, அதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற் கொண்டபடி, பள்ளியை நோக்கி விறுவிறுவென நடந்துசென்றான். ஓரிடத்தில் மழை மிகக் கடுமையாகக் கொட்டத் துவங்க, அருகிலிருந்த வீடொன்றில் அவன் ஒதுங்கி நின்ற சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி கோபத்துடன் பீமைப் பார்த்தாள். அடுத்த நொடி, பீம் தெருவில் விழுந்துகிடந்தான். தன் நெஞ்சோடு இறுக்கமாக அவன் பிடித்திருந்த புத்தகப் பையினுள் இப்போது நீர் முழுவதுமாகப் புகுந்திருந்தது. எழுந்து நின்றான். அவனுக்கு எதிரே இன்னமும் அந்தப் பெண்மணி ஆவேசத் துடன் நின்றுகொண்டு இருந்தாள். ”நீ ஒரு மகார்! என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டுக்குள் காலடி வைப்பாய்?” என இரைந் தாள். அந்தக் கொட்டும் மழை ஈரத்தையும் மீறி, தீண்டாமை எனும் கொடிய நெருப்பு சிறுவன் பீமின் இதயத்தை எரித்தது.
தனது குழந்தைகளை எந்தப் பேய் நெருங்கிவிடக் கூடாது என கிராமத்திலிருந்து ராம்ஜி சக்பால் நகரத்துக்கு அழைத்து வந்தாரோ, அங்கேயும் அது வெவ்வேறு வித மான ரூபங்களில் தன் குழந்தை களைப் பயமுறுத்தி வருவதைக் கண்டு அவர் மிகுந்த மன வேதனை கொண்டார்.
பீம் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆரம்பக் கல்விகள் முடிந்து, உயர்நிலைக் கல்வியில் சேரும் நேரமும் வந்தது. பள்ளி யில் தன் மகனைச் சேர்க்கச் சென்றபோது, இம்முறை ராம்ஜி கூடுதல் கவனத்துடன் புதிய பள்ளியின் சாதியத் தொந்தரவு களிலிருந்து மகனைப் பாதுகாக்க ஒரு புதிய உத்தியை மேற்கொண் டார். அதன்படி, பீம் எனும் அவன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் பட்டப் பெயரான சக்பாலை எடுத்துவிட்டு, பீமின் மேல் பற்று வைத்திருந்த ஆசிரியர் ஒருவரின் பெயரைச் சேர்க்க முடிவு செய்தார். அந்தப் பெயர்தான் அம்பேத்கர். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கடைசி மனிதனுக்கும் வாழ்வதற்கான நம்பிக்கையையும், போராடுவதற்கான வலிமையையும் ஊட்டும் பெயராக விளங்கி வரும் அந்தப் பெயர் உருவாக்கம் பெற்றது இப்படித்தான். அதுவரை பீமாராவ் சக்பால் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவன், அன்று முதல் பீமாராவ் அம்பேத்கராக மாறினான்.

ராம்ஜி சக்பாலுக்கு இச்சமயத்தில் மகாராஷ்டிரத்தில் காரேகான் எனும் இடத்தில் காசாளர் வேலை கிடைத்தது. எனவே அவர், தன் பிள்ளைகளை அவர் களின் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கே சென்றுவிட் டார். விடுமுறை நாளின்போது அம்பேத்கர், அவரின் சகோதரன் மற்றும் அக்காள் மகன் ஆகிய மூவரும் தங்கள் தந்தையைச் சந்திக்கவேண்டி, காரேகானுக்கு ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த நேரத்தில் இவர்கள் வரும் தகவல் கிடைக்காத காரணத்தாலோ என்னவோ, இவர்களை அழைத் துப் போக ரயில் நிலையத்துக்குத் தந்தை வரவில்லை. மூவரும் வாட கைக்கு ஒரு மாட்டுவண்டியைப் பிடித்து காரேகான் செல்லத் தயாராயினர். பாதித் தொலைவு சென்றிருப்பார்கள்… வண்டிக்கார னுக்கு தான் மகார் இனச் சிறுவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்பது தெரிய வர, சட்டென ஆத்திரப்பட்டவன் அப்படியே அந்த வண்டியைக் குடை சாய்த்து மூன்று சிறுவர்களையும் கீழே உருண்டு விழச் செய்தான். அதன் பிறகு மிகுந்த சிரமத்துக்கிடையே மூவரும் தட்டுத் தடுமாறி, ஒரு வழியாக காரேகானுக்குச் சென்று சேர்ந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக மிகுதியால் ஒரு குளத்தில் இறங்கி நீர் குடிக்கச் சென்றபோது ஊரார் ஒன்று சேர்ந்து துரத்தி அடித்த சம்பவம், சிகை திருத்தும் நிலையத்தில் முடி பாதி வெட்டப்பட்ட நிலையில் அரைகுறையாக இறக்கிவிடப் பட்டு அவமானத்தோடு வீடு வந்து சேர்ந்து, சகோதரிகளால் மீதமுள்ள முடி திருத்தப்பட்ட சம்பவம் எனச் சிறுவயதிலேயே தீண்டாமையின் கொடுமை வெந்தணல் கொப்புளங்களாக அவர் உள்ளத்தில் நீர் கட்டி நின்றன. கல்வி ஒன்றுதான் இவை அனைத்துக்கும் தீர்வு என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அம்பேத்கர், முன்னிலும் தீவிரமாகப் படிப்பில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்.
பள்ளியில் அம்பேத்கர் தனது ஆழ்ந்த படிப்பாலும், இனிமையான சுபாவத்தாலும், எதனையும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்தும் நுண்ணறிவாலும் தனித்துவமான மாணவனாக விளங்கினார். என்றாலும், சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூளையில் புற்றுநோயாக ஒட்டிக்கொண்டு இருந்த சாதியம் எனும் வெறி, அவரை மனதளவில் பள்ளியிலிருந்து விலகியிருக்கவே செய்தது. இதனால் பள்ளிக்காலங்களில் அம்பேத்கருக்குத் தோழர்கள் என யாரும் இல்லை. ஆனால், அந்தக் குறையைப் புத்தகங்கள் போக்கின. ஒரு நல்ல நூலைக் காட்டிலும் சிறந்த நட்புவேறு எதுவாக இருந்துவிட முடியும்? சமயம் கிட்டும்போதெல்லாம் அந்த நண்பர்களுடன் தனது நேரத்தை முழுமையாகச் செலவிடுவார் அம்பேத்கர். மாலை நேரங்களில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று, இந்த உலகத்தையும் மனிதர்களையும் வேடிக்கை பார்க்கத் துவங்குவார்.
இப்படிச் சிறு வயதிலேயே ஆழ்ந்த சிந்தனையும் தனிமை யுமாகக் காணப்பட்ட அந்தச் சிறுவனை, அந்தப் பூங்காவுக்கு வழக்கமாக வரும் ஒரு நபர் நாள்தோறும் கவனிக்கத் துவங்கினார்.அவர் பெயர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர். வில்சன் ஹைஸ் கூலின் தலைமை ஆசிரியரான அவர், அப்போதே இந்தச் சிறுவனிடம் அசாத்தியமானதொரு சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார்.
அந்த வருட மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் முடிவுகள் வெளி யானபோது, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ஒருவன் முதல்முறையாக மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றது மிக முக்கியமான செய்தியாக அங்கிருப்பவர்களால் பேசப்பட்டது. ‘நமது சமூகத்தில் முதல்முறையாக ஒருவன் செய்திருக்கும் சாதனையை நாம் கொண்டாடவேண்டும்’ என அந்த மக்கள் முடிவு செய்து, அதற்கென ஒரு விழாவை ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவுக்கு அவர்கள் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைத்தார்கள். அவர் கெலுஸ்கர். பூங்காவில் பார்த்து, எந்த மாணவ னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தோமோ, அதே மாணவனுக்குத்தான் நாம் பரிச ளிக்கப் போகிறோம் என்பதை அறிந்து, அந்த ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
விழாவில், சிறுவன் அம்பேத் கரை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்க் கட்டியணைத்துப் பாராட்டிய கெலுஸ்கர், அவனது உள்ளத்து உறுதியைக் கண்டு, ஒரு புத்தகத் தைப் பரிசாக அளித்தார். பின்னாளில் அந்தப் புத்தகம்தான் அம்பேத்கரின் வாழ்க்கையையே தலைகீழான மாறுதலுக்கு உள்ளாக்கப் போகிறது என்பதை அவர்கள் இருவருமே அப்போது அறிந்திருக்க இயலாது!

ஆரம்ப கல்வி-2

5092008
கிளை பிரிந்து செல்லும் ஆறு, வறண்ட நிலங்களைத் தேடி அலைந்து, இறுதியில் வீணே கடலில் கலக்கிறது.
ஆனால், அம்பேத்கர் எனும் மூல ஆறு, தன் பயணத்தின் துவக்கத்திலேயே ஒடுக்கப்பட்டவர்களுக் கான பயணமாகத் தன் பாதையைத் தீர்மானித்துக் கொண்டு, அதிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதி வரை பயணித்தது.
அந்த நெடிய பயணத் தின் முதல் புள்ளிதான் அன்று விழாவில் கெலுஸ்கர் அவருக்குப் பரிசாகத் தந்தபுத்தகம்.
அந்தப் புத்தகத்தின் பெயர் ‘கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு’.
அனைத்து உயிர்களுக்கும் அன்பையும் அமைதியையும் இன்பத்தையும் நல்கும் வாழ்க்கைநெறியான புத்தரது போதனைகள் அம்பேத்கரது உள்ளத்தில் புது வெளிச்சம் பாய்ச்சின. தன்னைச் சூழ்ந்து அழுத்தியிருக்கும் சாதியம் எனும் கற்பாறைகளை அடித்து நொறுக்க, அறிவு ஒன்றுதான் தன் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என்பதை அம்பேத்கர் அந்த விழா மேடையில் உணர்ந்தார். இத்தனைக்கும் அவர் அந்த மெட் ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றது 750க்கு 282 எனும் மிகக் குறைந்த மதிப்பெண்களில்தான்.ஆனால், அன்று வரை வேறு எவரும் மகர் இனத்தில் இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்றி ருக்கவில்லை.
உயிருக்காகப் போராடிக் கொண்டு இருக்கும் பெரும் கூட்டத்தினரின் நெருக்கடிகளில்இருந்து தப்பித்திருப்பது தான் ஒருவர் மட்டுமே என்பதை உணர்ந்தார் அம்பேத்கர். துன்பத்திலும் துயரிலுமாக இந்தியா முழுக்க உழலும் எத்தனையோ கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் ஒரு ஏணியாக மாறி, அவர்களையும் தன்னைப் போல மாற்ற முடியுமா எனக் கனவு கண்டார். அவருக்குள் அந்தக் கனவு ஒரு பொறியாகக் கனன்றது. தான் இன்னும் பல உயர்ந்த படிப்புகளை படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே அந்தக் கனவை நனவாக்க இயலும் என அவரது உள்ளம் அறிவுறுத் தியது.
பாய்மரக் கப்பல் கிழக்குத்திசை யில் பயணிக்கும்போது கடல் காற்று மேற்கு நோக்கி அடித்து அதனைத் திசைதிருப்புவதுபோல, அவரது எண்ணங்களுக்கு மாறாக ஒரு திடீர்ச் சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. அது அவரின் திருமணம். உண்மையில், அம்பேத் கர் தன் தந்தையிடம் இப்போது திருமணம் வேண்டாம் என எவ்வளவோ மன்றாடிப் பார்த் தார். ஆனாலும், ஒரு சம்பந் தத்தை அவரது தந்தையார் பேசி முடித்துவிட, அம்பேத்கர் மறுத்து விட்டார். பஞ்சாயத்து அவருக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதித்த தோடு, அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் எனத் தீர்ப்புச் சொன்னது. அப்போது அம்பேத் கருக்கு வயது பதினாறுதான். மணப் பெண்ணோ ஒன்பதே வயதான சிறுமி. பெயர் ரமாபாய்.டபோலியில் ஒரு சுமை தூக்கும் கூலியின் இரண்டாவது மகள். பம்பாய் பைகுல்லா மார்க்கெட்டில் ஒரு திறந்தவெளி அங்காடியில், சந்தடிகள் ஓய்ந்த இரவு நேரத்தில் கரிய வானும் நட்சத்திரங்களும் உடன் சில நண்பர்கள், உறவினர் கள் சாட்சியாக எளிமையான அவர்களின் திருமணம் நிகழ்ந்தது.கருக்கலில் மீன் விற்கும் பெண்கள் அங்கு வருவதற்குள் மொத்தக் கூட்டமும் கலைந்து சென்றது.
சாயாஜிராவ் கெய்க்வாட். பரோடாவை ஆண்டுகொண்டுஇருந்த சிற்றரசர். கெலுஸ்கர்தான் அவரைப் பற்றி முதன்முதலாக அம்பேத்கரின் தந்தையிடம் எடுத்துக் கூறி, ”அந்த மன்னர் யாராவது ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனுக்குரிய கல்விக்கான முழுத் தொகையையும் செலவு செய்யச் சித்தமாக இருக்கிறார். நாம் ஏன் அம்பேத்கரின் கல்லூரிப் படிப்புகாக அவரிடம் உதவிகேட்கக் கூடாது?” என்றார். கெலுஸ்கரின் இந்தக் கேள்வி அடுத்த சில நாட்களிலேயே அம்பேத்கரையும் அவரது தந்தை யையும் பரோடா அரண்மனை யில், மன்னர் சாயாஜி முன் கொண்டு நிறுத்தியது. அம்பேத்கரின் புத்திசாலித்தனத்தைச் சில கேள்விகளின் மூலம் அறிந்து கொண்ட மன்னர், மாதா மாதம் 25 ரூபாய் உதவித்தொகை தருவதாக உத்தரவாதம் அளித்தார்.
பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரி, அம்பேத்கரின் வரவால் சற்றுப் பரபரப்படைந்தது. தன்னைக் கண்டதும் விலகிச் செல்லும் சில உயர்சாதி மாணவர்களைக்கண்டு உள்ளூர நகைத்தார் அம்பேத்கர். கண்ணிருந்தும் குருடர்களாகத் தடுமாறும் அவர்களை அவரது அறிவின் வெளிச்சம் அலட்சியப்படுத்தி அப் பால் தள்ளியது. கல்லூ ரியில் முல்லர் போன்ற ஆசிரியர்கள் அவரது அறிவின் ஆழத்தைக் கண்டு, அவருக்கு அவ்வப்போது அத்தியாவசியமான உதவிகளைச் செய்து, தங்களது பெயரை வரலாற்றில் இணைத்துக்கொண் டனர். அம்பேத்கரின் தந்தையான ராம்ஜிசக்பால் தன் மகனுக்காக பம்பாய் பரேலில் இரண்டு அறை களைக்கொண்ட புதிய வீட்டுக்கு குடிபுகுந்தார். அவற்றில் ஒரு அறை படிப்பதற்கென்றே பிரத் யேகமாக ஒதுக்கப்பட்டது. மகன் இரவு வெகு நேரம் கண்விழித்துப் படித்துக்கொண்டு இருப்பதை வெளியில் இருட்டில் அமர்ந்து, ஜன்னலின் வெளிச்சத்தை பார்த் தபடியே ராம்ஜியும் பூரிப்புடன் கண்விழித்திருப்பார். அம்பேத் கரின் உழைப்பின் பலனாக 1912ல் பி.ஏ., பட்டம், அவரது தலையை அலங்கரித்தது.
படிப்பு முடிந்த பின், மன்னருக்குக் கொடுத்த வாக்கின்படி அம்பேத்கர் அரண்மனையில் வேலை செய்தாக வேண்டும்.ஆனால், தந்தையார் ராம்ஜி
சக்பாலுக்கோ தன் மகன் மேலும் உயர் படிப்புகள் படித்து, அனைவரும் வியக்கத்தக்க உன்னத நிலைக்கு வர வேண்டும் என்பது பிடிவாதமான அவா. ஆனால், அம்பேத்கரோ கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதுதான் கற்ற கல்விக்கு அழகு என்பதில் தீவிரமாக இருந் தார். படைப் பிரிவில் லெப்டி னென்ட் பதவி அவருக்காகவே காத்திருந்தது. தன் மகன் இத்த னைப் படித்தும், மீண்டும் தன் னைப் போலவே மன்னனுக்கு சேவகம் செய்யப் போய்விட்டானே எனும் கவலை ராம்ஜிசக்பாலை உருக்குலைக்கத் தொடங்கியது.
வேலைக்குச் சேர்ந்து சரியாகப் பதினைந்தே நாளில், அம்பேத்க ருக்கு ஒரு தந்தி வந்தது. அடுத்த நாள் காலையில், கட்டிலில் படுத் திருந்த அந்த வயதானவரின் மெல்லிய கரங்கள் நடுங்கியபடி அம்பேத்கரின் முதுகை வாஞ்சை யோடு தடவிக்கொடுத்தன. சுற்றி யிருந்த உறவினர்களின் கேவல் களும் அழுகை ஒலிகளும் ஒரு கட்டத்தில் வெடித்துப்பீறிட, நொடியில் சடலமாகிப்போன தன் தந்தையின் உடலைப் பார்த்து அம்பேத்கர் கதறியழுதார். அந்த வெற்றுடம்புக்கு இப்போது மகனை உயர்ந்த படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை ஏதும் இல்லை. அம்பேத்கருக்குள் அது இடம் மாறியிருந்தது.
ஒரு மகனாகத் தந்தைக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் முடித்ததும்,இனி அரண்மனைக்குத் திரும்புவ தில்லை என அம்பேத்கர் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருந்தார். தந்தையின் கனவு என்பது ஒரு காரணம்தான் என்றாலும், அரண்மனையில் இதர சாதியினர் காட்டும் சாதிய வேறுபாடுகளும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. இந் நிலையில், அடுத்து என்ன செய்வது எனக் குழம்பிய நிலையில் அம்பேத்கர் தன் எதிர் காலத்தின் இருண்ட வாசலில் நின்றுகொண்டு இருந்தபோது, தூரத்து வெளிச்சப் புள்ளியாய் ஒரு தகவல் வந்தது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைத் தன் சொந்த செலவில் படிக்கவைக்கப்போவதாக பரோடா மன்னர் விடுத்திருந்த அழைப்பு அது. எந்த அரண்மனைக்குள் செல்ல வேண்டாம் என முடிவெடுத்திருந் தாரோ, அதே அரண்மனைக்கு தன் கல்வியின் நிமித்தமாகவும் தன் தந்தையின் கனவு நிமித்த மாகவும் மீண்டும் உதவி கேட்டு விண்ணப்பித்தார் அம்பேத்கர். மூன்று முத்துக்களை பரோடா அரண்மனை தேர்வு செய்தது.அவர்களில் ஒருவராக அம்பேத்கர் மீண்டும் அரசரின் முன் நின்றார்.கல்வி முடிந்ததும், பத்தாண்டுக் காலம் அரண்மனைச் சேவகம் எனும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கையெழுத்திட்டார்.
1913 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு காலை நேரம்… நியூயார்க் நகரம் எப்போதும் போல் காபியைச் சுவைத்தபடி பரபரப்பாகத் தன் நாளை ஒரு புதிய இளைஞனுடன் கைகுலுக்கித் துவக்கிக்கொண்டது.அம்பேத்கரு�
�்குள் இனம்புரியாத மன எழுச்சி. என்னவென்றே விவரிக்கத் தெரியாத உற்சாகம்!
காரணம்…

பந்தலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

 பந்தலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்
 பந்தலூர் பஜாரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.


பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து தரப்பினரும் வாக்களிக்க வலியுறுத்தியும் வாக்கு சதவீதத்தினை அதிகப்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர்கள் கடமை, வேட்பாளரை தேர்வு செய்யும் முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.


இவற்றை பந்தலூர் பகுதியில் உள்ள வியாபாரிகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பேருந்துகளில் உள்ள பயணிகள் என பலதரப்பினரிடையே வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
.
 காலையிலேயே சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிக்க தவறும் பட்சத்தில் கள்ள ஓட்டாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் நல்லவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் போட்டியிடும் வேட்பாளர் யாரையும் பிடிக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம் எனவும் வலியுறுத்தினர். 

நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், மகா த்மா காந்தி பொதுசேவை மைய அமைப்பாளர் நௌசாத், துணை தலைவர் சுரேஷ், கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Saturday, April 5, 2014

சுகாதார நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளும்போது தான் சுகாதார தினத்திற்கு மரியாதை கிடைக்கும்.

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார மையம் (World Health Organaisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து  'உலக சுகாதார தினம்' 1950 முதல்  ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி  ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை,  உலக  சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 

தற்போது ஆட்கொல்லி நோய்களாக விளங்குகின்ற டெங்கு, எலிக்காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் இன்புளுவென்சா (H1 N1) எயிட்ஸ் என்பவற்றின் தாக்கத்தை முறியடிக்க சுகாதாரப் பகுதியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு சுகாதாரத் தொற்று நோய் தடுப்பு பிரிவு நாடாளாவிய ரீதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமலிருப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சிகள்  நடை பெற்றதையும் அனைவரும் அறிவோம்.

ஆனால் தற்போது சுற்றுப்புற சுகாதாரம் எப்படி இருக்கிறது என்பது மிக பெரிய கேள்வி குறியாக உள்ளது.   உள்ளாட்சி மன்றங்கள் சுகாதார பாதுகாப்பு மேம்பட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக செலவினத்தில் 1.2 சதவீதம் கண்டிப்பாக சுகாதார நடவடிக்கைக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகள் சுகாதார நடவடிக்கையாக கழிப்பிடம் கட்டி காசு பார்க்கும் நோக்கில் டெண்டர் விட்டு விடுகின்றனர் டெண்டர் எடுத்தவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால்  தெருவோர கழிப்பிடங்கள் அதிகரித்து சுகாதாரம் கேள்வி குறியாகி விட்டது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய் குப்பை தொட்டிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் இதில் மக்கள் பயன் படுத்தாத இடங்களில் அமைப்பதால் பயனற்று உள்ளது  சுகாதரத்தினை பாதுகாப்பதில் உள்ளாட்சிகள் நடவடிக்கை முறையாக மேற்கொள்ளத்தினால் தெருவெங்கும் குப்பைகள் கழிவு நீர்கள் தேங்கி மக்கள் நோயினால் பாதிக்கும் அபாயத்தினை  ஏற்படுத்தி வருகின்றது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு சுகாதார நடவடிக்கைகள் முறையாக  மேற்கொள்ளும்போது தான் சுகாதார தினத்திற்கு மரியாதை கிடைக்கும்.


S.SIVASUBRAMANIAM,
President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.

ஏப்ரல் 7-ம் தேதி 'உலக சுகாதார தினம்'

'உலக சுகாதார தினம்' 1950 முதல்  ஆண்டுதோறும் அப்போதைய அவசியத்தை ஒட்டிய ஒரு கருப்பொருளில் ஏப்ரல் 7-ம் தேதி  உலக சுகாதார மையம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை,  உலக  சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 

'சுத்தம் சோறு போடும்', "கூழானாலும் குளித்துக் குடி', "கந்தையானாலும் கசக்கிக் கட்டு', "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று தமிழில் ஆரோக்கியம் குறித்து கூறப்பட்ட பழமொழிகளை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. தங்களுடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள், வீதியையும் பொது இடங்களையும் பொது வாகனங்களையும் அப்படி இருக்கவிடுகிறார்களா?பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்று சட்டமே இயற்றப்பட்டுவிட்டது. இன்னமும் பொது இடங்களில் புகைப்பது நிற்கவில்லையே!
"இவ்விடம் சிறுநீர் கழிக்காதீர்' என்ற எச்சரிக்கைப் பலகையைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர்போல அதன் எதிரிலேயே கழிப்போர் எத்தனை பேர்? படித்தவர்களும் இதில் விதிவிலக்கு அல்ல.
பஸ், ரயிலில் பயணம் செய்வோர் சாக்லேட் காகிதங்களையும் தின்பண்டங்கள் சுற்றப்பட்ட காகித உறைகளையும் பிளாஸ்டிக் பொட்டலங்களையும், பான் பராக் போன்றவற்றின் உறைகளையும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைகளுக்குக் கீழேயோ எதிரிலேயோ கூச்சமே இன்றி போடுகிறார்கள். சப்போட்டா, கமலா ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடுவோர் அவற்றின் கொட்டைகளை பக்கத்தில் இருப்பவரின் காலில் தெறிக்குமே என்ற கவலையே இல்லாமல் பலமாக தரையில் துப்புகிறார்கள்.
பான் பராக் போன்ற மெல்லும் புகையிலை வஸ்துகளைச் சுவைப்போர், வாயில் ஊறும் நீரை இனி வாய் கொள்ளாது என்றால் அப்படியே காலுக்குக் கீழே, பஸ், ரயில்களின் ஜன்னல் விளிம்புகள், கோலமிட்ட வீதிகள் என்று எங்கு வேண்டுமானாலும் துப்பிவிடுகிறார்கள். எச்சில் துப்புகிறவர்கள் அடுத்தவர் நலனை நினைத்துப் பார்ப்பதே கிடையாது. பஸ் ஓடும்போதே எச்சில் துப்புகிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
ஏதும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளும், ஏழை - எளியவர்களும், கோயில்களுக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு வெறுங்காலுடன் நடப்பவர்களும் பயன்படுத்தும் வீதிகளாயிற்றே என்று பாராமல் எச்சில் துப்பி சாலைகளை அசுத்தப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் கல்வியறிவு வளரவளரத்தான் இப்படி பொது இடங்களிலும் அசுத்தம் அதிகமாகி வருகிறது என்பது வருத்தம் தரும் விஷயமாகும்.
ஆட்டோ, பஸ், கார், லாரி, வேன் ஓட்டுனர்களிடம் பான்-பராக் போன்ற பொட்டலம் சாப்பிடும் பழக்கமும், அதை அப்படியே சாலையில் வாந்தி எடுத்தாற்போல் துப்பும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. புகையிலையும் போதைப் பொருளும் தடவப்பட்ட இந்த பாக்குகளால் வாய்ப்புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்கும் ஜீரண நீர்கள், ரத்தம் போலத்தான் உமிழ்நீரும். அது உணவை ஜீரணிப்பதற்காக உடலால் இயற்கையாக சுரக்க வைக்கப்படுகிறது. அதை பாழ்படுத்துவதும் இப்படி புளிச்புளிச்சென்று துப்பிக்கொண்டே இருப்பதும் உடல் நலத்தையும் சீரழித்துவிடும் என்று உணர்ந்து திருந்துவது நல்லது.
பொது இடங்களில் குப்பைபோட்டு அசுத்தம் செய்வோருக்கும், எச்சில் துப்புவோருக்கும் அபராதம் அல்லது சிறு தண்டனை விதிப்பது அவசியமாகும். தாங்கள் அசுத்தப்படுத்திய இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச தண்டனையையாவது அளித்தால்தான் தமிழ்நாடு தூய்மையான மாநிலமாக மாறும்.


S.SIVASUBRAMANIAM,
President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.

இன்று உலக சுகாதார தினம்



 இன்று சர்வதேச சுகாதார தின மாக உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.O) பிரகடனப்படுத்தியுள்ளது. 

இவ்வுலகில் வாழுகின்ற மக்கள் சுகாதாரக் கோட்பாடுகளை எந்த அளவிற்குப் பின் பற்றுகின்றனர். இதனால் நோய்களிலிருந்து எவ்வாறு மீட்சி பெறுகின்றனர்? என்பதைக் கவனத்தில் கொள்வது இங்கு உசிதமாகும்.
தற்போது ஆட்கொல்லி நோய்களாக விளங்குகின்ற டெங்கு, எலிக்காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் இன்புளுவென்சா (H1 N1) எயிட்ஸ் என்பவற்றின் தாக்கத்தை முறியடிக்க சுகாதாரப் பகுதியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு சுகாதாரத் தொற்று நோய் தடுப்பு பிரிவு நாடாளாவிய ரீதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமலிருப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
ஆபத்துடன் கூடிய நோய் அறி குறிகளை கீழ்கண்டவாறு வகுக்கலாம். மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு அல்லது வயிற்றில் வலி, தொடர்ச் சியான வாந்தி, மயக்கத்தன்மை நினைவுத் தடுமாறல், போன்ற நோய் சுகமாகி மீண்டும் காய்ச் சலுடனும் கடும் இருமலுடன் திரும்பி வருதல் என்பவைகளாகும்.
எயிட்ஸ் நோய் எச்.ஐ.வி. வைரஸால் ஏற்படுகின்றது. ஓரினச் சேர்க்கையினால், பிர மாதர் தொடர்பால் இந்நோய் பரவுகின்றது. எயிட்ஸ் நோயுடைய வரிடமிருந்து இரத்த தானம் பெற்றாலோ, அவர்களுக்கு போடப்படும் ஊசிகள் மற்றவர்களுக்கு உபயோகப்படுத்தினாலோ எயிட்ஸ் பரவ வாய்ப்புக்கள் உண்டாகின்றது.
டெங்கு காய்ச்சலை இந்நோயைப் பரப்பும் நுளம்புகளை இல்லா தொழித்தால் கட்டுப்படுத்த முடிகின்றது. சுற்றாடலில் குப்பை கூளங்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் என்பவற்றை இல்லாமல் செய்தால் நுளம்பு பரவுவது தடைப்படுகின்றது. சுற்றாடலை அசுத்தமாக வைத் திருப்போர் மீது சுகாதாரப் பிரிவினர் காவல் துறையினரின் அனுசர ணையுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதனையும் காண முடிகின்றது.
மேலும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கண்நோய், பெரிய அம்மை, இருதய நோய், யானைக்காய் நோய், புற்று நோய் என்பவை பரவாமல் இருக்க செளக்கிய திணைக்களம் மக்களைத் தொடர்ந்தும் விழிப் புணர்வுக்குள்ளாக்கி வருகின் றனர்.
இனி உடற் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக விளங்குகின்ற உணவு வகைகளை எவ்வாறு தெரிவு செய்கின்றனர் என்பதை விரிவாக ஆராய்வோம்.
மனித வாழ்வில் உடல் சுகாதாரத் தையும், ஆரோக்கியத்தையும் நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு இயற்கை உணவும் உன்னத இடத்தை வகிக்கின்றது என்பதை மறுப்பதற் கில்லை. நாம் உண்ணும் உணவில் புரதப் பொருட்கள் மாவுப் பொருட்கள் சக்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் இந்த நான்கும் அடங்கியுள்ளன.
இவை உடல் வளர்ச்சிக்குத் தேவைதான், இருப்பினும் இவை நான்கும் இருந்து விட்டால் மட்டும் மனிதன் ஒரு நோய் நொடி இல்லாமல் உயிர் வாழ்ந்து விட முடியாது. பிணி வராமல் தடுத்து நிறுத்துவதற்குரிய உயிர் ஆற்றல் அல்லது நோய் எதிர்ப்புச் சக்தி தேவைப்படுகின்றது. தாவரங்கள் கொடுக்கும் உணவுகளிலே பழங்கள் தான் ஒரு முழுமைபெற்ற உணவு என்பது நிதர்சனமாகும். நல்ல உடல் நலத்திற்கு விற்றமின் பி பன்னிரெண்டு தேவைப்படுகின்றது. இது இன்றியமையாத உயிர்ச்சத்தாகும்.
இதனை மரக்கறி உண்பவர்கள் முக் கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் தாவர உணவுகளில் விற்றமின் பி பன்னிரெண்டு பயனுள்ள வடிவத்தில் கிடைப்பதில்லை. நமது இரத்த செல்களையும் டி.என்.ஏ. (DNA) மரபுக் கூறுகளையும் உற்பத்தி செய்வதற்கும், நரம்புச் செல்களின் மீது ஒரு பாதுகாப்பு உறையைப் போர்த்துவதற்கும் விற்றமின் பி பன்னிரெண்டு தேவைப்படுகின்றது.
போஷாக்கற்ற தரம் குறைந்த உணவுகளை உட்கொள்பவர்கள் முதலில் நோய்வாய்ப்பட்டு விடு கின்றனர்.
அத்தோடு அவர்கள் குணநலன் குன்றிப் போய் ஆத்திரம், அங்கலாய்ப்பு, கோபம், வன்மம் போன்ற வக்கிர புத்தியடையவர்களாகவும் தன்னிச்சையாகவே மாறிவிடுகின்றனர்.
இவ்வுலகில் அவதரித்த மானிடர்கள் அனைவருமே நீண்ட ஆயுளுடன் வாழத்தான் விரும்புவார்கள் என்பது கண்கூடு. 1871 சராசாரி ஆயுட்காலம் பெரும்பாலும் நாற்பது முதல் ஐம்பது வருடங்களாகக் கணிக்கப்பட்டது.
அதேவேளை 1991 ம் ஆண்டின் மக்களின் சராசரி ஆயுட்காலம் அபரிமித முன்னேற்றம் அடைந்ததற்கு காரணம் என்னவாகவிருக்கும்? இன்றையயுகத்தில் சுகாதாரத் துறையானது வியத்தகு முன்னேற்றம் அடைந்தமையே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் அவதரித்த நாளிலிருந்து முதுமையை எட்டி மரணப்படுக்கை வரையிலும் கண்டிப்பாக சில பருவங்களைக் கடக்க வேண்டியுள்ளது. குழந்தையாக தவழுகின்ற போதும் மூப்படைந்த காலகட்டத்திலும் சிலர் குறிப்பாக சுகாதாரத்தை நல்ல முறையில் பேணாதவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது. பொதுவாக வாலிபப் பருவத்தில் பிணியின் தாக்கம் கணிசமான அளவு குறைவடைந்து காணப்படுவது இயற்கை. இது யதார்த்தமும் கூட.
மகப் பேற்றினைத் தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனையின் நிமித்தம் சிசு பிறந்த குறிப்பிட்ட கால எல்லைக்குள் சொட்டு மருந்து, தடுப்பூசி என்பவற்றை தவறாது பெற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அசட்டையாக இருப்போமானால் இளம் பிள்ளைவாதம் மற்றும் இன்னோரன்ன நோய்கள் உண்டாகி குழந்தையின் எதிர்காலமே சூனியமாகி விடவும் கூடும். எனவே மிகவும் விழிப்புடன் செயலாற்ற வேண்டிய கடப்பாடு நம் கையிலேதான் உள்ளது எனலாம்.
விடலைப் பருவத்தின் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சிலருக்கு வக்கிரமான சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றால் எச்.ஐ.வி/ வைரஸ்சினால் ஏற்படுகின்ற ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய் காவிகளாகவும் ஆகிவிடுகின்ற னர். இவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன் எஞ்சிய வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகி விடுகின்றது.
எம்.பி.பி.எஸ். (MBBS) பட்டம் பெற்ற மருத்துவர்கள் அரிதாகவுள்ள அக்கால கட்டத்தில் டாக்டர் எஸ். ஏ. விக்ரம சிங்கா “எம்.பி.பி.எஸ்”சின் தலைமையின் கீழ் மலேரியாத்தடை இயக்கம் உருவாக்கப்பட்டது. பெரு ம்பாலான பொது சுகாதார பரிசோ தகர்கள் மலேரியாத் தடை இயக்கத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.
இரத்த பரிசோதனை தொடக்கம் மருந்து மாத்திரைகள் அனைத்தும் மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு அமெரிக்காவால் நன்கொடை யாக வழங்கப்பட ஜீப் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்கு டி.டி.ரி (D.D.T) குடியிருப்புக்களுக்கு விசிறப்பட்டது. இதற்கென்று விசிறும் மையம் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. காலப் போக்கில் மலத்தீன் விசுறும் பணி முன்னெடுக் கப்பட்டது. மலேரியாத் தடை இயக் கத்தின் நோக்கமும் வெற்றியளித்தது.
வயோதிப வயதை எட்டியவர்களுக்கு இயற்கையாகவே தன்னிச்சையாக சில நோய்கள் ஏற்பட்டுவிடுகின்றன. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பலபந்தம் புரஸ்ரேற்சுருப்பி வீக்கம் (ஆண் முதியவர்களுக்கு மட் டும்) என்பன உண்டாகி அவர்களை வாழ்க்கை பூராவும் அல்லலுறச் செய்கின்றன. இரத்த அழுத்தம், நீரிழிவு என்பன ஒரு சிலருக்கு பரம் பரை வியாதியாகவும் வரலாம். ஆனால் மருத்துவ நிபுணரின் ஆலோ சனையின் பிரகாரம் உணவுக் கட்டுப் பாட்டை மேற்கொண்டாலும் நோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
உலகிலேயே சிகரெட் (CIGARETTE) பிடிப்பதால் ஏற்படும் உயிரிழப்பு எமது அண்டை நாடான பாரதத்தில் தான் அதிகம் காணப்படுகின்றது. இதனை உலக சுகாதார ஸ்தாபனம் கண்ட றிந்துள்ளது.
பீடி, சிகரெட், சுருட்டு இன்னோர ன்ன புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்பது இலட்சம் பேர் தமது இன்றுயிரை இழக்கின்றார் கள். சிகரெட்போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பாரதத்தில் அதிகரித்து வருவதால் இந்த இறப்பு வீதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இர ண்டு மடங்கு உயரும் அபாயம் உள்ளது.
மும்பையில் (MUMBAY) சிகரெட் பிடிப்பதால் நூற்று முப் பத்தொன்பது ஆண்களும் புகையிலைப் பொருட்கள் பாவனையினால் நூற்று முப்பத்தைந்து பெண்களும் ஆண்டு தோறும் பலியாகின்றனர். புகைபிடிக்க ஆரம்பிக்கும் எவருமே அதற்குக் கிட்டத்தட்ட அடிமையாகிவிடுகிறார்கள். ஏனெனில் உடலில் நிக்கோடின் (NiCOTIWE) அளவு குறைய ஆரம் பிக்கும் போது புகைத்தே ஆகவேண்டும் என்ற அகீத ஆசையை அது தூண்டும்.
சுகதேகியாகவும் ஆரோக்கியம் மிக்கவராகவும் வாழ்வதற்கு ஆகாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. உணவை இயற்கை மருத்துவர்கள் மூன்று வகைகளாக வகுத்துள்ளனர். அவையாவன சாத்வீக உணவு, ரஜஸ் உணவு, தமஸ் உணவு என்பவையாகும்.
சாத்வீக உணவு என்றால் என்ன? இதனை முழுமையான உணவு என் றும் அழைக்கலாம். உணவைப் பொறுத்தவரை முதன்மை பெற்று விளங்குவது இந்த சாத்வீக உணவுதான்.
மக்களுக்கு உண்டாகின்ற நோய்கள் அனைத்திற்கும் உகந்த ஔடதங்களை வழங்குவதும், விசேட வைத்திய நிபு ணர்களினால் சத்திர சிகிச்சை மேற் கொண்டு நீண்ட ஆயுளுக்கு வித்திடுகி ன்ற தன்மை சுகாதாரத்துறையினரையே சாரும். ஆரோக்கிய வாழ்வை நமக்கு அளித்து வருகின்ற சுகாதாரத்தைப் பேணுவது அவசியம் என்பது வெள்ளிடைமலை.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

Thursday, March 27, 2014

Wednesday, March 12, 2014

கொளப்பள்ளி தையல் பயிற்சி சான்று





கொளப்பள்ளி தையல் பயிற்சி சான்று

பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் நேரு யுவ கேந்திரா சார்பில் மகளிர் தையல் பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி முடித்தோருக்கு பயிற்சி  சான்றிதழ்கள் வழங்க பட்டது.

நீலகிரி நேரு யுவகேந்திரா மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் கொளப்பள்ளி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு தையல் மைய பொறுப்பாளர் லோகநாதன் தலைமை தாங்கினார்.
சேரங்கோடு ஊராட்சிமன்ற உறுப்பினர் ரமேஸ்குமார், கொளப்பள்ளி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், சமூக ஆர்வலர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மகளிர் தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள சுயதொழில் அவசியமாகின்றது. இதற்கு எளிதில்  பயன்படுத்திக்கொள்ள தையல் பயிற்சி உதவுகிறது. தையல் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் மகளிர் தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து அரசின் இலவச சீருடைகளை தைத்து கொடுக்கலாம்.
சொந்தமாக தையல் இயந்திரம் வாங்க இயலாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மகளிர்கள் ஒன்று சேர்ந்து ஆயத்த ஆடைகள் தைத்து விற்பனை செய்யலாம். உள்ளூர் மக்களின் ஆடைகளை தைத்து கொடுத்தாலே மிக பெரிய வருமானம் பெற முடியும். எனவே தையல் தொழில் முடித்தவர்கள் சுயமாக முன்னேறி அடுத்தவர்களுக்கு எடுத்து காட்டாக வாழ வேண்டும், என்றார்.
தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு நேருயுவகேந்திரா சார்பில் தையல் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மைய மாணவிகள் மற்றும் மகளீர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா வரவேற்றார். முடிவில் தையல் பயிற்சி மைய ஆசிரியை நவமணி நன்றி கூறினார்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

இந்தி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இந்தி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கூடலூர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்க ளும் வழங்க பட்டது.  இந்திய அரசு நேரு யுவகேந்திரா நீலகிரி சார்பில் சுவாமி விவேகானந்தா வாழ்க்கை குறித்து கட்டுரை போட்டி இந்தியில் நடத்த பட்டது இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கட்டுரைகளை இந்தியில் எழுதினர்கள்.  இதில் முதல் பரிசு சாபிரா இரண்டாம் பரிசு வித்யா முன்றாம் பரிசு ஆர் அகிலா ஆகியோர் பெற்றனர்.  இவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கூடலூர் ராமகிருஷ்ணா உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.  

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்  தலைமை தாங்கினார்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.   

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்சார வாரிய உதவி மின் கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போது ஹிந்தி இந்தியாவில் முக்கிய மொழியாகும்.  மத்திய அரசு பணிகளுக்கு இந்தி தெரிந்து இருப்பது அவசியம். வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது மொழி தெரியாமல் தவிக்கும் நிலையில் இன்று நாம் சிக்கிக் கொண்டுள்ளோம் என்பது குறிப்பிட தக்கது.   எந்த மொழியையும் யாரிடமும் திணிக்க முடியாது விருப்பட்டு கற்றுக் கொள்வதை தடுக்கவும் முடியாது.  தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று கொண்டு மற்ற  மொழிகளும் கற்று கொள்வது நம்மை முன்னேற்றி கொள்வதற்கு  பெரும் உதவியாக அமையும் என்றார்.  
தொடர்ந்து கட்டுரை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், திவ்யா தட்டச்சு பள்ளி ஆசிரியர் கதிரவன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.  முன்னதாக நுகர்வோர் மைய செயலாளர் கணேசன் வரவேற்றார் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி நன்றி கூறினார்.